கனடாவில் தொற்றுநோய் காலங்களில் சுயநலம் பாராது, மக்களுக்கு கடமையாற்ற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வரும் வால்மார்ட் ஊழியர்கள் விடுமுறைக்கு முன்னதாக ஊக்க நிதியுதவியை பெற உள்ளனர்.
டிசம்பர் 11 ஆம் தேதி தனது முழுநேர ஊழியர்களுக்கு கூடுதல் $250 வழங்க இருப்பதாக வால்மார்ட் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, பகுதி நேர தொழிலாளர்கள் $ 150 பெறுவார்கள் எனவும், மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத் தொகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் 85,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்று வால்மார்ட் கனடா குறிப்பிடுகிறது.
ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதம் வால்மார்ட் நிறுவனம் தனது முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு முறையே $ 200 மற்றும் $ 100 பாராட்டு ஊக்கத் தொகையைச் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 டாலர்கள் ஊதியத்தை கூடுதலாகப் பெற்றனர்.
தொற்று நோயின் ஆரம்பத்தில் லோப்லாஸ் மற்றும் சோபீஸ் நிறுவனங்கள் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தன. ஆனால் இரண்டு திட்டங்களும் இறுதியில் முடிவுக்கு வந்தன.
வால்மார்ட் நிறுவனம் மட்டும் தொடர்ச்சியாக தனது பணியாளர்களுக்கு இது போன்ற ஊக்கத் தொகைகளை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது.
பணியாளர்கள் தொற்றுநோய் தாக்கத்தின் போதும், உயிரை துச்சமென மதித்து பணிக்கு வருவதால், அவர்களுக்கு முறையாக கைமாறு செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நிறுவனம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்க: அறிகுறியே இல்லை என்றாலும், கொரோனா பரிசோதனை தேவை – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கனடாவின் பிராந்தியம்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.