கனடா வாழ் தமிழ் மக்களுக்காக தமிழ் சமூக மையம், தமிழ் கனேடிய பாரம்பரிய மற்றும் வரலாற்று மையம் ஒன்று டொராண்டோவில் திறக்கப்பட உள்ளது.
இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில், டொராண்டோவில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கும் பயன் தரும் வகையில் இந்த தமிழ் சமூக மையம் திறக்கப்பட உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு டொராண்டோ மாநகர சபை அங்கீகாரம் அளித்தது.
இந்த நிலத்தை மிகக்குறைந்த குத்தகைக் கட்டணத்தில் பெற்றுகொள்வதற்காக டொராண்டோ நகரசபையுடனும், நகரசபை முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வி அவர்களுடனும் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நகரசபை உறுப்பினர்களுடனும் ஒருவருட காலமாக நெருக்கமாகச் செயற்பட்டு தமிழ் சமூக மையம் வெற்றி கண்டுள்ளது.
சமூக சேவைகள் மூலம் வாழ்க்கைத்தரம், சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படும் இந்த தமிழ் சமூக மையம், கனடாவில் பரந்து விரிந்து காணப்படும் தமிழினம், கருப்பினத்தவர்கள், பூர்வக்குடிமக்கள் மற்றும் சமத்துவம் நாடும் பிற மக்கள் என பலரது தேவைகளையும் தெரியப்படுத்த உதவும் நோக்கில் அமைக்கப்பட உள்ளது.
311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி முகவரியில் உள்ள நிலத்தை உத்தேச தமிழ் சமூக மைய அமைவிடமாக டொராண்டோ மாநகர சபை அங்கீகரித்துள்ளது.
இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் டொராண்டோ, மார்க்கம், டுர்ஹாம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்காபரோவில் சமுதாய மையம் அமைவதற்கான தேவைகள் போன்ற விபரங்களை அறிந்துகொள்ளவும் www.tamilcentre.ca என்னும் இணையத்தளத்தை நாடுங்கள்.
இதையும் படியுங்க: கனேடிய மக்களுக்கு நம்பிக்கை இல்லையா? நானே கொரோனா தடுப்பூசி போடத்தயார் – துணை பிரதமர்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.