கனடாவில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை நிரூபிக்க வேண்டும். சர்வதேச பயணங்களுக்காக கனடாவின் பல்வேறு விமான நிலையங்களை அதே நாளில் கனடிய அரசாங்கம் மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
கனடாவில் 8 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓமர் அல்கப்ரா தெரிவித்துள்ளார். பயணிகள் சர்வதேச பயணங்களுக்காக அதிக விமான நிலையங்களை அணுகமுடியும்.
Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் அதிகரித்து வருவதால் சர்வதேச பயணங்கள் பாதுகாப்பானதாக இருக்கும் என்று அமைச்சர் ஓமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கனடிய அரசாங்கம் நவம்பர் மாத இறுதிவரை தடுப்பூசி போடுவதற்கு விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு கால அவகாசம் அளித்துள்ளது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பொருந்தும். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள், ரயில் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற அனைத்து பயணங்களிலும் கூட்டாட்சி போக்குவரத்து கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.
அக்டோபர் 30ஆம் தேதிக்கு முன்பு கனடாவிற்கு வந்தடைந்த சர்வதேச பயணிகள், எதிர்மறையான covid-19 பரிசோதனை முடிவுகளை வைத்திருந்தால் ,முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றாலும் பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி வரை கனடாவில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.