ஒன்டாரியோ மாகாணத்தில் அத்தியாவசியமற்ற இடங்களுக்கு தடுப்பூசி சான்றுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து covid-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.தொடர்ந்து இன்று நான்காவது நாளாக covid-19 வழக்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருவதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி மருந்து பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்ற 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உட்பட 30 சதவீதத்திற்கும் அதிகமான ஒன்டாரியோ மக்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை 574 covid-19 வழக்குகளும்,புதன்கிழமை 463 வழக்குகளும், வியாழக்கிழமை 677 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை அன்று 600-க்கும் மேற்பட்ட புதிய covid-19 வழக்குகள் பதிவாகியது என்று ஒன்டாரியோ மாகாணத்தின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.தினசரி வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதோடு இன்று 10 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கடந்த வாரம் 821 covid-19 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இன்று 640 covid-19 வழக்குகளாக குறைந்துள்ளது. மாகாணம் முழுவதும் 5583 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 33,303 covid-19 பரிசோதனைகள் எடுக்கப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. பரிசோதனைகளில் 1.9% சதவீதம் நேர்மறை முடிவு விகிதத்தை உருவாக்கியுள்ளது. இது கடந்த வாரத்தை விட குறைவு என்று கூறப்படுகிறது.