கேரளாவைச் சேர்ந்த நிவேத் ஆண்டனி சல்லிக்கல் மற்றும் அப்துல் ரெஹிம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் மனதில் ஒரே எண்ணம் மட்டும் தான். மற்ற இந்திய திருமணங்கள் போன்றே தன்பாலின ஈர்ப்பினர்களின் திருமணமும் அழகாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது தான். இந்த மெசேஜை மட்டும் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தான் நாங்கள் எங்களின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை நாங்கள் பதிவு செய்தோம். ஆனால் இது வைரலாகும் என்று நினைக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
நிவேத்திற்கு 27 வயதாகிறது. பெங்களூருவில் இருக்கும் டெலிரேடியாலஜி சொலியூசன்ஸ் நிறுவனத்தின் க்ளைண்ட் கோ- ஆர்டினேட்டராக பணியாற்றுகிறார். மற்ற இந்தியர்களின் திருமணம் எப்படி நடைபெறுமோ அவ்வாறே நாங்களும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். எங்களின் திருமணத்திலும் ஹால்தி, சங்கீத், மெஹந்தி போன்ற சடங்குகள் நடைபெற உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களின் திருமண நாள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் பெங்களூருவில் ஏதேனும் ஒரு ஏரிக்கரையில் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டுக்கு முன்பாக கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர். இவர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட் இரண்டு இடங்களில் நடைபெற்றது. வீட்டில் தங்களின் செல்ல வளர்ப்பு பிராணிகளுடன் ஒரு போட்டோஷூட்டும், இயற்கை வனப்பின் மத்தியில் ஒரு போட்டோஷூட்டும் நடத்தியுள்ளனர். இந்த போட்டோக்களை பார்க்கும் போது ஒரு நல்ல தம்பதிகளுக்காக கப்பிள் கோல்களை நமக்கு கூறுவதாகவே இருக்கிறது. இதற்கு முன்பு இது போன்ற ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமண புகைப்படங்களை பார்த்து பலரும் பல வித கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் மற்ற திருமணங்கள் போன்று தான் இந்த திருமணமும் அழகானது என்பதை நாங்கள் நிரூபிக்கவே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
ஐந்து வருடங்கள் இவ்விருவரும் காதலித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் இருவர் மனதிலும் உதித்தது. அப்போது தான் உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டம் 377-ஐ நீக்கி உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து நாங்கள் இந்த முடிவினை எட்டினோம் என்று அவர்கள் கூறினார்கள். ரெஹீமின் வயது 32. அவர் அமீரகத்தில் வேலை பார்த்து வருகிறார். நாங்கள் இருவரும் அமெரிக்கா அல்லது கனடா என ஏதேனும் நாட்டுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் பின்பு ஏன் இந்தியாவில் கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதனால் தான் இங்கேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம்.
இவர்களின் வீட்டினர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தரவில்லை. அதனால் அவர்கள் திருமணத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனாலும் இவர்களின் மீது வெறுப்பு ஏதும் அவர்களுக்கு இல்லை. எல்லாம் இயல்பாகவே நடைபெற்று வருகிறது. நிவேத் தரப்பில் அவருடன் அவருடைய திருநங்கை அம்மாவும், திருநங்கை சகோதரியும் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.