ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மக்கள் மீது தீவிரவாத தாக்குதலை ஏற்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். தாலிபான்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள் பலரும் அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளுக்கும் மீள்குடியேற்றம் செய்கின்றனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல் நகரிலும் தாலிபன்கள் நுழைந்து பகுதிகளை கைப்பற்றி வருவதால் மோசமான நிலையை அந்நாட்டு மக்கள் எதிர்கொள்கின்றனர்.
தாலிபன்கள் தலைநகர் காபுல் பகுதியில் நுழைவதால் கனடிய அரசாங்கம் அங்குள்ள தனது தூதரகத்தை உடனடியாக மூடிவிட்டு தூதரக நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது கனடிய தூதரகத்தின் நிலைமை மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்யும் திறனுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் கூறுகிறது.
குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனடிய பணியாளர்கள் பாதுகாப்பாகவும், அவர்களின் நலனிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மற்றும் கனடாவிற்கு திரும்பும் வழியில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக நடவடிக்கைகள் இடைநிறுத்தம் தற்காலிகமானது என்றும், காபூல் பாதுகாப்பான நிலைமையை அடைந்தவுடன் தூதரகம் மீண்டும் இயங்கும் என்றும் தெரிவிக்க பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தலைநகருக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தானில் வாழும் குடியிருப்பாளர்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றி அரசாங்கத்தை சரணடைய கோரிக்கை வைத்துள்ளனர்
ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கனடாவிற்குள் நுழைய கனடா அனுமதியளித்துள்ளது. தற்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ள கனடிய மக்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறி கனடாவிற்கு திரும்புமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது