கனடாவில் மூன்றாவது அலையாக உருவெடுத்து covid-19 தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து கனடா அரசாங்கம் வெளிநாடுகளில் covid-19 தாக்கம் அதிகம் உள்ள நாடுகளுக்கு இடையேயான விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் covid-19 தொற்று எண்ணிக்கை விரைவாக உயர்ந்து வருவதோடு பல்வேறு உயிரிழப்புகளும் நேர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே வைரஸ் தாக்கம் அதிகமான நாடான இந்தியா மற்றும் அதன் அருகே உள்ள பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் இருந்தும் கனடாவிற்கு வருகை புரியும் அனைத்து விதமான வானூர்திகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது தொடர்ந்து 30 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள சுகாதாரத்துறை, பொதுமக்கள் பாதுகாப்பு, குடியகல்வு மற்றும் குடிவரவு போன்ற துறைகளின் அமைச்சர்கள் மத்திய அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து ஆலோசித்த போது ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை புரியும் வானூர்திகளை குறிப்பாக தடை செய்து அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளனர்.
சமீபகாலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளிடையே covid-19 வைரஸ் தொற்று அதிகமாக இனங்காணப்பட்டது.
இந்தியாவில் இருந்து கனடா வந்த 50 சதவிகிதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.