உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் அமெரிக்கா, கனடா உட்பட அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.ரஷ்ய அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் நடவடிக்கைகளால் சர்வதேச நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
இரு நாடுகளுக்கு இடையேயான மோதலினால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வராததை போல உயர்ந்துள்ள விலைவாசியும் குறையப்போவதில்லை என்று கனேடிய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
போர் காரணமாக கனடாவில் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் தானியங்கள் சார்ந்த உணவுப் பொருட்களின் விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களின் விலையும் உயரும் என்று தெரிவித்துள்ளனர்
உக்ரைன் விவசாய உணவு துறையின் ஆற்றல் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. கோதுமை, மக்காச்சோளம் போன்ற ஏராளமான பயிர்கள் அங்கு பயிரிடப்படுகிறது உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை, மக்காச்சோளம் முதலான பொருட்கள் 25% அங்கிருந்துதான் வருகிறது.
தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவி வரும் சூழலில் கருங்கடலில் உள்ள பல துறைமுகங்களில் போக்குவரத்து தடை பட்டுள்ளதால் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது. எனவே பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது