உக்ரைன் அதிபர் Volodymir Zelenskyy செவ்வாய்க்கிழமையன்று கனடிய பாராளுமன்றத்தில் மெய்நிகர் வாயிலாக உரையாற்றினார். உக்ரைனை தீவிரமாக ஆக்கிரமித்து வரும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை மற்றும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துவதற்கு கனடா உதவ வேண்டுமென்று வேண்டுகோளை விடுத்தார்.
உக்ரைனில் இருந்து காணொளி வாயிலாக கனடிய பாராளுமன்றத்தில் Zelenskyy உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.உக்ரைனை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ரஷ்யாவின் இரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்து விவாதம் செய்தார். மேலும் தனது நாட்டில் நிலவிவரும் அச்சுறுத்தலையும் பயங்கரவாத தாக்குதலையும் கனடியர்கள் தங்களுக்கு நடப்பதுபோல கற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
உக்ரேனிய அதிபரின் உரையைக் கேட்க பல்வேறு செனட்டர்களும் ,பாராளுமன்ற உறுப்பினர்களும் House of Commons-இல் ஒன்றுகூடினர். ” ரஷ்யா இரக்கமற்ற தாக்குதலை நடத்திவரும் உக்ரைனில் ஒவ்வொரு இரவும் பயங்கரமான இரவு ” என்று உக்ரேனிய மொழியில் Zelenskyy கூறினார்.
ரஷ்ய படையெடுப்பு இப்போது 20 ஆவது நாளில் உள்ளது. இறப்பு எண்ணிக்கை 700 ஆக ஐக்கிய நாடு சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 97 பேர் குழந்தைகள் ஆவர் என்று கூறிய பிரதமர் வேதனை தெரிவித்தார். “நாங்கள் நியாயத்தையும் உண்மையான ஆதரவையும் மட்டுமே கேட்கிறோம். அதிகம் கேட்கவில்லை ” என்று கூறினார்