உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையேயான படையெடுப்பில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளை கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து உள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கனடிய அரசாங்கம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ரஷ்ய மாணவர்கள் ,சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் தங்கள் நாட்டின் நிதி நிலையை பாதிப்பதை பார்த்து ரஷ்யாவில் உள்ள தங்களது குடும்பங்களின் நிலையை நினைத்து கவலை கொள்கிறார்கள். மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் படிக்கும் ரஷ்ய மாணவி ,அடுத்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை தன்னால் செலுத்த முடியாமல் போகலாம் என்று கவலை தெரிவித்துள்ளார் .மேலும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தனது பெற்றோரும் படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக விரைவில் வேலை இழக்க நேரிடும் என்று ரஷ்ய மாணவி வேதனை தெரிவித்துள்ளார் .
தனது அடிப்படை தேவைகள் மற்றும் கல்விக்கான நிதி உதவியை ரஷ்யாவில் இருக்கும் பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்த மாணவி ,தற்பொழுது கனடிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக நிதியிலிருந்து துண்டிக்கப்பட்டு உள்ளார்.இவரைப்போல ரஷ்யாவில் இருந்து கனடாவிற்கு படிக்க வந்த பல்வேறு மாணவ மாணவிகளும் சிரமத்தில் உள்ளனர். எனவே ரஷ்யா விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ரஷ்ய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.