உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது படையை நிறுத்தியுள்ளது.ரஷ்யாவின் நடவடிக்கைகளால் உக்ரைனில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே கனடா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா ஆயுதப் படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து உள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து கனடிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது உக்ரைனில் போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் கனடிய அரசாங்கம் உதவி செய்வதற்கு முன் வந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக கனடா ஆயுத உதவி மற்றும் கடன் உதவி வழங்கும் என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்று மேற்கத்திய நாடுகள் அனைத்தும் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளன. ரஷ்யா பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ராணுவ வீரர்களை உக்ரேன் எல்லைக்கு அருகில் நிறுத்தி உள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டமில்லை என்று ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ தலைக்கவசம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் தனது பிராந்தியத்தை தற்காத்துக்கொள்ள பிரிட்டானியா, அமெரிக்கா, போலந்து ஆகிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளன.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள இருக்கும் உக்ரைனுக்கு 500 மில்லியன் கனடிய டாலர்கள் கடன் உதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.உக்ரேன் ராணுவ படைகளுக்கு வெடிபொருட்களும் ஆயுத உதவிகளும் கனடா வழங்கும் என்று தெரிவித்தார்.