எல்லையில் லாரி ஓட்டுநர்களுக்கு Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து லிபரல் அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்பிற்கு லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதமரின் covid-19 தடுப்பூசி ஆணைகளை எதிர்த்து தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்டது.மேலும் பிரதமரை தாக்க உள்ளதாகவும் பேசினர்.
எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் போராட்டத்திற்கு பிறகு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி குடும்பத்தினருடன் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்களின் தடுப்பூசி தேவைக்கு எதிராக “Freedom Convoy ” என்ற போராட்டமாக தொடங்கியது.
போராட்டத்தில் சில கனடியர்கள் பிரதமரை நோக்கி மிகவும் கடுமையான மற்றும் ஆபாசமான சொற்களை உடைய பதாகைகளை எடுத்துச் சென்றனர். ஊனமுற்றோர், முதியோர்கள் மற்றும் சிலர் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் சில போராட்டக்காரர்கள் அங்கிருந்த முக்கிய போர் சின்னத்தில் நடனம் ஆடினர்.கனடாவின் உயர் அதிகாரி ஜெனரல் வெய்ன் ஐர் மற்றும் தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
தலைநகரில் கடுமையான குளிர் எச்சரிக்கையையும் மீறி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்ததை அடுத்து கலவரம் ஏற்படக் கூடும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.