Covid-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை தன் சந்தித்த முதல் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். ரஷ்யா – உக்ரேன் இடையேயான போர் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரில் சந்திப்பதற்காக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இங்கிலாந்து சென்றார். இதனை அறிந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் பிரதமர் ட்ரூடோவை தனது வின்ட்சர் மாளிகைக்கு அழைத்தார்.
மகாராணியின் அழைப்பை ஏற்று பிரதமர் ட்ரூடோ அரண்மனைக்கு சென்றார். ராணி எலிசபெத் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இனிமையாக வரவேற்றார். மகாராணியை சந்தித்தபோது ஜஸ்டின் ட்ரூடோ பெரும் புன்னகையுடன் அளவளாவினார்.இருவரின் சந்திப்பின்போது மகாராணிக்கு அருகில் இருந்த மேசையில் நீலம் மற்றும் மஞ்சள் நிறப் பூக்கள் வைக்கப்பட்டிருந்தது.இது உக்ரைனுக்கு ஆதரவாக மகாராணி நிற்பதை வெளிப்படுத்துகிறது என்று கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
பிரதமர் ட்ரூடோ மற்றும் மகாராணி எலிசபெத் ஆகிய இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுத்த படங்களையும் காணமுடிகிறது. 1970களில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை கனடாவின் பிரதமராக இருந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ ஒரு சிறுவனாக மகாராணியை பல முறை சந்தித்துள்ளார்.
இன்று அவரை சந்தித்தபோது “மகாராணியாரை கடந்த 45 வருடங்களாக எனக்கு தெரியும் என்பதில் நான் பெருமை அடைகிறேன் ” என்று ட்ரூடோ கூறினார்.மேலும் ” உலக நிகழ்வுகள் குறித்து பயனுள்ள உரையாடல்கள் எங்களுக்குள் நிகழ்ந்தது” என்று கூறினார். இங்கிலாந்தின் மஹாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியார் கனடாவிற்கும் மகாராணி என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.