Canada : கொரோனா தொற்று நோயின் காரணமாக நடைமுறைக்கு வந்த ஊரடங்கால் பல நாடுகளின் பொருளாதாரச் சீரழிவை எதிர் நோக்கி வருகிறது.
ஒரு சில நாடுகள் பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று தாக்கத்தால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
இந்த நிலையில், கனடாவிலும் கொரோனா தாக்கம் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதித்து வருகிறது.
தற்போது கனடாவில் கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், ”கனடாவில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக அக்டோபர் 31 ஆம் தேதி வரை வெளிநாட்டினவருக்குப் பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது.
இதில் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு கொடுக்கப் படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இதுவரை 1,58,758 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,34,971 பேர் குணமடைந்துள்ளனர். 9,297 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: கனடாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட Quebec மாகாணம்! புதிய கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகம்!
மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.