ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்து உக்ரைன் எல்லையை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளுக்கு உக்ரேனிய மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு பலியாகி வரும் உக்ரேனிய மக்களுக்கு ஆதரவாக கனடிய செஞ்சிலுவை அமைப்பு உக்ரேனில் பல்வேறு உதவிகளை வழங்குகிறது.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக கனடிய அரசாங்கம் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளது .தற்பொழுது உக்ரேனில் இருந்து வெளியேறி கனடாவிற்கு குடியேறும் அகதிகளுக்கு புதிய மற்றும் எளிய புலம்பெயர்தல் திட்டத்தை கூட்டாட்சி அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவில் குடியேறுவதற்கு விசா பெறும் போது பொதுவாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளிலிருந்து உக்ரேனிய அகதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Canada -Ukraine authorization for emergency travel என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் எளிதாக அகதிகள் கனடிய விசாக்களை பெறலாம்.குறிப்பாக இந்த விசாக்களை விண்ணப்பிக்கும் உக்ரேனியர்கள் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்தத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னதாகவே கனடாவிற்கு புலம் பெயர்ந்த உக்ரேனியர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தங்களது தங்குதலை நீட்டித்துக் கொள்ளலாம்.மேலும் உக்ரேனியர்கள் புலம்பெயர்தல் விண்ணப்பங்களுக்கான கட்டணங்கள் அனைத்தையும் நீக்க உள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது .உக்ரேனிய மக்களுக்கான வேலைவாய்ப்பு என்ற இணையதளத்தையும் கனடிய அரசாங்கம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்